நாட்டில் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி இருப்பதாகவும், அரசு செல்வந்தர்களுக்காக திட்டங்களை வகுக்கிறதா எனவும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசை தாக்கிப் பேசியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதார நிலை தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த நிகழ்வில் அவர் பேசியதாவது: இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளபோதிலும் அதன் வளர்ச்சி அனைவருக்குமானதாக இல்லை. உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், அதிக அளவிலான அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இருந்தும் அதன் வளர்ச்சியில் பாகுபாடு நிலவுகிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் வேலையில் உள்ளவர்கள் வெறும் 46 சதவிகிதம் என்கிற அளவுக்கு குறைவாகவே உள்ளது. அந்த 46 சதவிகிதத்தில் 69 சதவிகிதம் பேர் ஆண்கள், வெறும் 22 சதவிகிதம் பேர் பெண்கள். இந்த 46 சதவிகிதத்திலும் 50 சதவிகிதம் பேர் அதாவது 23 சதவிகிதம் பேர் மட்டுமே வேலை செய்கின்றனர்.
கடந்த 9 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இந்த சூழல் மாறாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது என்றால், ஏன் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. வேலைவாய்ப்பு இல்லாமல் விலைவாசி அதிகமாக உள்ள சூழலே தற்போது நிலவுகிறது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். யாருக்காக அரசு செயல்படுகிறது. ஏழை மக்களுக்காகவா அல்லது பணக்காரர்களுக்காகவா என்றார்.