மத்திய அரசின் கோதுமை ஏற்றுமதி, இறக்குமதி திட்டங்களால் ஏழை மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பிரதமர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதால் நாட்டில் உள்ள ஏழை மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஊடக அறிக்கை ஒன்றை அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: தெலங்கானாவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை!
அந்த அறிக்கையில் மத்திய அரசு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து இந்தியாவில் கோதுமை விலையேற்றத்தை குறைப்பதற்காக ரஷியாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்ய அனுமதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உலகுக்கே உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாகக் கூறினார். அவர் கோதுமை ஏற்றுமதிக்கு தாராளமாக அனுமதி அளித்தார். அதன்பின், இந்தியாவில் கோதுமைக்கு நெருக்கடி வந்துவிட்டது. கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் கோதுமை இருப்பு 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. நிலைமை மிகவும் மோசமடைந்த பிறகு இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிக்க: எதிர்க்கட்சிகள் ஒற்றுமை மிகவும் அவசியம்: ஆம் ஆத்மி
தற்போது அரசு கோதுமையை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. பிரதமர் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளும் முயற்சியில் மீண்டுமொருமுறை ஏழை மக்களை கடினமான சூழலுக்குத் தள்ளியுள்ளார் எனப் பதிவிட்டுள்ளார்.