மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழையால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் மழைக்கு சென்னையில் கடந்த இரு நாள்களில் மழைக்கு 19 போ் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு!
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
'மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருடன் நான் இருக்கிறேன்.
இந்தப் புயலால் காயமடைந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் அயராது உழைத்து வருகின்றனர். மேலும் நிலைமை முழுமையாக சீராகும் வரை அவர்கள் தங்கள் பணியைத் தொடருவார்கள்' என்று தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.