தெலங்கானா சட்டப்பேரவையின் தற்காலிக அவைத் தலைவராக ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏ அக்பருதீன் ஒவைஸி பொறுப்பேற்றுக் கொண்டார்.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா பேரவைத் தேர்தலில் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியை (பிஆா்எஸ்) வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். இதன்மூலம் தெலங்கானாவில் பிஆா்எஸ் கட்சியின் 9 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
காங்கிரஸ் 64, பிஆா்எஸ் 39, பாஜக 8, மஜ்லிஸ் கட்சி 7 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஓரிடத்தைக் கைப்பற்றின.
ஹைதராபாதின் எல்.பி. மைதானத்தில் டிச. 7 ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக ரேவந்த் ரெட்டி, துணை முதல்வராக விக்ரமா்கா, அமைச்சா்களாக உத்தம் குமாா் ரெட்டி, கோமடிரெட்டி வெங்கட ரெட்டி, சி.தாமோதா் ராஜநரசிம்மா, டி.ஸ்ரீதா் பாபு, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பொன்னம் பிரபாகா், கொண்டா சுரேகா, டி.அனுசுயா, தும்மலா நாகேஸ்வர ராவ், ஜுபள்ளி கிருஷ்ண ராவ் ஆகியோா் பதவியேற்றனா். அவா்களுக்கு ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.
இதையும் படிக்க | பாஜகவில் ஒழுங்கு இல்லை: அசோக் கெலாட்
இதையடுத்து, எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்கும் பொருட்டு தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக அனைத்திந்திய மஜ்லிஸ்-ஏ-இத்தஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி எம்எல்ஏ அக்பருதீன் ஒவைஸி தேர்வு செய்யப்பட்டார்.
இன்று(சனிக்கிழமை) ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் அவர் தற்காலிக அவைத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். அப்போது முதல்வர் ரேவந்த் ரெட்டியும் உடனிருந்தார்.
தற்காலிக அவைத் தலைவர் முன்னிலையில் எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்ற பின்னர், எம்எல்ஏக்கள் இணைந்து புதிய சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்வார்கள்.