சிவராஜ் சிங் சௌகான் ராஜிநாமா! ஆட்சியமைக்க உரிமை கோரினார் மோகன் யாதவ்!!
மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவ. 17-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. கடந்த டிச. 3-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியாகின. இதில், பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
இதையடுத்து மத்திய பிரதேசத்திற்கு முதல்வரை தேர்வு செய்யும் கூட்டம் இன்று போபாலில் நடைபெற்றது. இதில், மோகன் யாதவ் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ், சிவராஜ் சிங் சௌகான் அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
இதையும் படிக்க | மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு!
மேலும், ஜகதீஷ் தேவ்தா, ராஜேஷ் சுக்லா ஆகிய இருவரும் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பேரவைத் தலைவராக மத்திய முன்னாள் அமைச்சர் நரேந்திர தோமர் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் முதல்வர் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
போபாலில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் மங்குபாய் சி. படேலிடம் இன்று(திங்கள்கிழமை) தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
இதன்பின்னர், சிறிது நேரத்தில் ஆளுநரை சந்தித்த மோகன் யாதவ், ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது சிவராஜ் சிங் சௌகானும் உடனிருந்தார்.
மத்திய பிரதேசத்தில் புதிய அரசு பதவியேற்பு தேதி குறித்து பாஜக விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.