வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உத்தர பிரதேச முன்னாள் அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் ஆட்சியில் மே 2007 முதல் டிசம்பர் 2011 வரை உயர்கல்வி அமைச்சராக பதவி வகித்தவர் ராகேஷ்தர் திரிபாதி. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது கடந்த 2013ஆம் ஆண்டு முதிகஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு பிரயாக்ராஜில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், திரிபாதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே திரிபாதியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக மாவட்ட அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.