பிப்.14ஆம் தேதி மத்திய பிரதேசம் முழுவதும் 'பசு அணைப்பு தினம்' கொண்டாடப்படும் என்று மத்திய பிரதேசத்தின் கோபாலன் மற்றும் பசுதன் சம்வர்தன் வாரிய நிர்வாகத் தலைவர் சுவாமி அகிலேஷ்வரானந்த் கிரி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலா் தினமாக கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினத்தை ‘பசு அணைப்பு தினமாக’ கொண்டாட ஆா்வலா்களுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் அதிகரிப்பால், வேத கால பாரம்பரியங்கள் அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டதாக வாரியம் தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க- துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் பலி
இந்த விவகாரத்தில் வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா, ‘பசுக்களை வழிபடும் பாரம்பரியம் கொண்ட இந்த தேசத்தில், விலங்குகள் நல வாரியத்தின் அழைப்புக்கு மக்கள் ஆதரவளித்தால் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும்’ என்றாா். இதனிடையே, தாங்கள் ஏற்கெனவே வெளியிட்ட வேண்டுகோளை திரும்பப் பெறுவதாக, விலங்குகள் நல வாரியம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் உயா் அமைப்பின் உத்தரவுபடி வேண்டுகோள் வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, வாரியத்தின் செயலாளா் எஸ்.கே.தத்தா தெரிவித்தார். இந்த நிலையில் பிப்.14ஆம் தேதி மத்திய பிரதேசம் முழுவதும் 'பசு அணைப்பு தினம்' கொண்டாடப்படும் என்று மத்திய பிரதேசத்தின் கோபாலன் மற்றும் பசுதன் சம்வர்தன் வாரிய நிர்வாகத் தலைவர் சுவாமி அகிலேஷ்வரானந்த் கிரி தெரிவித்துள்ளார்.
இது ஒரு நல்ல முயற்சி. அத்தகைய முறையீட்டை வாரியம் திரும்பப் பெற்றிருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.