பிரதமர் மோடி ஆணவத்துடன் நடந்து கொள்வதாகவும், அது நிலைக்காது எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். ‘கரங்கள் இணைவோம்’ எனும் பெயரில் நடைபெற்ற இந்த பிரசார பயண துவக்க விழாவில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் பொதுமக்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “2019ஆம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக இருந்தவரின் சொத்து மதிப்பு அடுத்த 2.5 ஆண்டுகளில் 13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் செல்வமும் தனிநபரின் கைகளுக்கு சென்றுள்ளது. இந்தப் பிரச்னையை நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பினோம். இதற்கு பதிலளிப்பதற்கு பதிலாக இது நாடாளுமன்றத்திற்கு எதிரானது எனத் தெரிவிக்கின்றனர்” எனக் குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து அவர், “அதானியின் பெயரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தார் அது சபைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும். அவரைப் பாதுகாக்க மோடியும், அவரது கட்சியினரும் ஏன் இவ்வளவு முனைப்பு காட்டுகின்றனர்?
இதையும் படிக்க | தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு!
பிரதமர் மோடி தலைக்கணத்துடன் உள்ளார். ஆனால் அது நிலைக்காது. 2014ஆம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்தால் பணவீக்கத்தைக் குறைப்பேன் என மோடி தெரிவித்தார். இப்போது அவர் எங்கே இருக்கிறார்? என கேள்வி எழுப்பினார்.