தில்லியில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆவணப்படத்தை சில நாள்களுக்கு முன்பு பிபிசி நிறுவனம் வெளியிட்ட நிலையில், 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பிபிசி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், மும்பை உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள பிபிசி நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத்தில் 2002-இல் நிகழ்ந்த கலவரம் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியது. நரேந்திர மோடி மாநில முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த கலவரம் குறித்து மறு விசாரணை செய்துள்ளதாகக் கூறப்படும் இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 17-ஆம் தேதியும் இரண்டாம் பாகம் 24-ஆம் தேதியும் வெளியானது.
இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று நிராகரித்த மத்திய அரசு, இதில் இடம்பெற்றுள்ள கருத்துகள், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறியது. மேலும், ஆவணப்படத்தின் இணைப்புகளை பகிரும் யூ-டியூப் விடியோக்கள், ட்விட்டா் பதிவுகளுக்கு தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த 21-ஆம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.