கொல்கத்தாவின் மால்டாவில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவில் மாணவர்களுக்கு அசைவம் வழங்காததால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை அசைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவின் மால்டாவில் இங்கிலீஷ் பஜார் பகுதியில் உள்ள அம்ரிதி தொடக்கப் பள்ளியில் மதிய உணவில் கோழிக்கறி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பள்ளியில் வழங்கப்படும் கோழியின் கால் மற்றும் சதைப் பகுதிகளை ஆசிரியர்கள் தங்களுக்கு வைத்துக்கொண்டும், மற்ற எலும்பு பாகங்களை மாணவர்களுக்கு வழங்குவதாக மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.
மதிய உணவில் கோழிக்கறி கிடைக்காததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். வாராவாரம் இதே நிலை நீடித்துள்ளது. மேலும் தரமான அரிசி மற்றும் சிக்கன் லெக் பீஸ்களை பயன்படுத்தி ஆசிரியர்கள் தனியாக உணவு சமைத்துச் சாப்பிடுவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, மாணவர்களும், பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் இது கைகலப்பாக மாறியது. பின்னர், பள்ளியை மாணவர்களும், பெற்றோர்களும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நான்கு மணி நேரம் பூட்டப்பட்ட ஆறு ஆசிரியர்கள்
மேலும், மாணவர்கள் பள்ளியில் உள்ள ஆறு ஆசிரியர்களை ஒரு தனி அறையில் வலுக்கட்டாயமாக அடைத்து பூட்டியுள்ளனர். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஆசிரியர்கள் பூட்டி வைக்கப்பட்டனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர்களை விடுவித்தனர். இந்த குற்றச்சாட்டைப் பள்ளியின் பொறுப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.