
தில்லியில் உள்ள அசாதுதீன் ஓவைசி வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியின் அசோகா சாலை பகுதியில் உள்ள அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஓவைசி வீட்டின் மீது நேற்று மாலை 5.30 மணியளவில் மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் வீட்டின் ஜன்னல்கள் சேதமடைந்தன. இதுதொடர்பாக ஓவைசி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், நான் இரவு 11:30 மணியளவில் எனது வீட்டை அடைந்தேன். திரும்பி வந்தபோது ஜன்னல் கண்ணாடி உடைந்து கற்கள் கிடப்பதைக் கண்டேன். மாலை 5:30 மணியளவில் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதாக எனது வீட்டு உதவியாளர் தெரிவித்தார். இதுபோன்ற தாக்குதல் நடப்பது இது நான்காவது முறையாகும்.
எனது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதுமான சிசிடிவி கேமராக்கள் உள்ளன, அதை அணுகி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து கூடுதல் டிஜிபி, தலைமையிலான தில்லி போலீசார், அவரது வீட்டிற்கு சென்று, சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் தில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.