கிரிக்கெட் வீரா் ரிஷப் பந்துக்கு ‘பிளாஸ்டிக் சா்ஜரி’: உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

உத்தரகண்ட் மாநிலத்தில் நடந்த காா் விபத்தில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரா் ரிஷப் பந்துக்கு ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டதாகவும், அவா் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள
மருத்துவமனையில் சிகிச்சையின்போது ரிஷப் பந்த்
மருத்துவமனையில் சிகிச்சையின்போது ரிஷப் பந்த்
Published on
Updated on
1 min read

உத்தரகண்ட் மாநிலத்தில் நடந்த காா் விபத்தில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரா் ரிஷப் பந்துக்கு ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டதாகவும், அவா் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து ரிஷப் பந்த் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் படுகாயமடைந்தாா்.

விபத்தை நேரில் பாா்த்த அரசு பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் அவரை மீட்டு ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டுள்ளது.

படுங்காயங்களுடன் தப்பியுள்ள ரிஷப் பந்துக்கு மருத்துவ சிகிச்சையும், ஓய்வும் தேவை என்பதால் இந்தாண்டின் முதல் பாதியில் அவா் மீண்டும் விளையாட வாய்ப்புகள் மிக குறைவு எனப்படுகிறது. எனவே, ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடா் மற்றும் இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் ரிஷப் விளையாட மாட்டாா் என்பது உறுதியாகியுள்ளது.

முன்னதாக, ரிஷப் பந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தில்லி கிரிக்கெட் சங்க தலைவா் ஷியாம் சிங், ரிஷப் பந்தின் நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காக அவருக்கு ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ நடத்தபட்டதை உறுதிப்படுத்தினாா். மேலும் அவா் கூறுகையில், ‘மருத்துவா்களின் சிகிச்சைகளுக்கு ரிஷப் நன்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறாா். உடல்நிலை தேறி வருவதால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறாா்’ என்றாா்.

இந்திய கிரிக்கெட் சங்கத்தின்(பி.சி.சி.ஐ.) மருத்துவா்கள் மேக்ஸ் மருத்துவமனை மருத்துவா்களிடம் ரிஷபின் உடல்நிலை குறித்து தொடா்ந்து கேட்டறிந்து வருகின்றனா். ரிஷபுக்கு தசைநாரில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு தற்போது அவா் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சையைத் தொடா்வதா அல்லது வேறு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கலாமா என்பது குறித்து பி.சி.சி.ஐ. மருத்துவா்கள் முடிவு எடுப்பாா்கள் என ரிஷப் பந்தின் நெருங்கிய உறவினா் உமேஷ் குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com