ராஜஸ்தானில் டெர்மினஸ்-ஜோத்பூர் சூர்யநகரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த பாந்த்ரா டெர்மினஸ்-ஜோத்பூர் சூர்யநகரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3.27 மணியளவில் பாலி பகுதியில் தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் 11 பெட்டிகள் பாதிக்கப்பட்டன. உடனடியாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு பேருந்துகளில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிக்க- கோவையில் குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகள்: மக்கள் அச்சம்
இதில் 24 பயணிகள் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பயணிகளின் நிலை குறித்து குடும்பத்தினர் அறிய உதவி எண்களையும் ரயில்வே அறிவித்துள்ளது. சம்பவம் பற்றி ரயிலில் பயணம் செய்தவர்கள் கூறியதாவது, “மார்வார் சந்திப்பில் இருந்து ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களில் பெரிய அளவில் சத்தங்கள் கேட்டு ரயில் நின்றது. நாங்கள் கீழே இறங்கி பார்த்தபோது படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் தடம்புறண்டு காணப்பட்டன. அடுத்த 15- 20 நிமிடங்களில் அங்கு ஆம்புலன்ஸுகள் வந்தன என்றார்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. சம்பவம் நடந்த உடனேயே விபத்து நிவாரண ரயில் ஒன்றும் சம்பவ இடத்திற்கு சென்றடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. சூர்யநகரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லும் மற்ற ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.