ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா செவ்வாய்க்கிழமை இணைந்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ யாத்ரா) நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7-ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தலைநகர் தில்லியை கடந்த டிசம்பர் இறுதியில் அடைந்தது.
புத்தாண்டு ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கிய நடைப்பயணம் பிரமாண்ட வரவேற்புடன் உத்தரப் பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்தது. இதில் கலந்து கொண்ட ஃபரூக் அப்துல்லா, ராகுல் காந்தியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். ராகுலுடன் பிரியங்கா காந்தியும் இருந்தார்.
காஷ்மீரை அடையும் போது ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் தாரிகாமி உள்ளிட்டோர் நடைப்பயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் முதல் தில்லியின் செங்கோட்டை வரை 3,122 கி.மீட்டரை கடந்துள்ள நடைப்பயணமானது, உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பஞ்சாபை கடந்து காஷ்மீர் சென்றடையவுள்ளது.