

புதுதில்லி: அயோத்தியில் ராமர் கோயில் 2024 ஜனவரி 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரிபுராவில் இன்று (ஜனவரி 05) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராமர் கோயில் திறப்பு ஆளும் பாஜகவிற்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1990களில் தேர்தலுக்கு இது ஒரு உந்து சக்தியாக உருவெடுத்ததையடுத்து கோயில் திறப்பை ஆதாரமாகக் கையில் எடுத்துள்ளது பாஜக.
இது தொடர்பாக பேசிய அமித் ஷா, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி கோயில் கட்டும் பணியைத் தொடங்கினார். கடந்த நவம்பர் மாதம், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயில் கட்டும் பணி பாதி முடிந்துவிட்டதாகவும், இந்த ஆண்டு டிசம்பருக்குள் தயாராகிவிடும் என்று கூறியிருந்தார்.
ராமர் கோயில் கட்டுமானம் பலதரபட்ட சட்ட சிக்கலில் சிக்கியது நாடு அறிந்ததே. கோயிலுக்கான இடத்தை உச்ச நீதிமன்றம் ஒப்படைத்த பிறகு ஆகஸ்ட் 2020ல் கட்டுமான பணிகள் தொடங்கின. அதன் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
கட்டி முடிக்கப்பட்ட கோவிலின் கீழ் தளத்தில் 160 தூண்களும், முதல் தளத்தில் 132 தூண்களும், இரண்டாவது தளத்தில் 74 தூண்களும் அமைக்கப்படும். ஐந்து 'மண்டபங்கள்' அமைக்கப்படும். புனித யாத்திரை வசதி மையம், அருங்காட்சியகம், காப்பகங்கள், ஆய்வு மையம், ஆடிட்டோரியம், கால்நடை கொட்டகை, நிர்வாக கட்டிடம் மற்றும் பூசாரிகளுக்கான அறைகள் இதில் அடங்கும்.
கோயிலின் அருகில் 'குபேர் திலா' மற்றும் 'சீதா கூப்' போன்ற பாரம்பரிய கட்டிடங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நவம்பர் 2019ல், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தையும் கோயிலுக்கு வழங்கியது. அதே வேளையில், அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.