ஏர் இந்தியா விமானத்தில் பயணத்தின்போது பெண் பயணி மீது, மது அருந்திய நபர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நவம்பர் 26ஆம் தேதி தில்லி - நியூ யார்க் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது மது அருந்திய நபர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியது. அது நடந்து 11 நாள்கள் கழித்து டிசம்பர் 6ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
நவம்பரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட மூதாட்டி ஏர் இந்தியா நிறுவனத் தலைவருக்கு எழுதிய கடிதம் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் நடைபெற்ற சம்பவமும் வெளியாகியுள்ளது.
தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து டிசம்பர் 6ஆம் தேதி பாரீஸ் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மீது, மது அருந்திய நபர் சிறுநீர் கழித்துள்ளார். இதில் அவரின் போர்வை நனைந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக புகார் அப்பெண் புகார் எழுப்பியதும், விமான போக்குவரத்து கட்டுப்பாடு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுநீர் கழித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக தில்லி விமான நிலைய பாதுகாப்புப் படையை சேர்ந்த பேசியதாவது, குற்றம் சாட்டப்பட்ட ஆண் பயணி, மது அருந்தியிருந்தார். அவர் சுயநினைவை இழந்து காணப்பட்டார். விமான ஊழியர்கள் கூறும் கட்டுப்பாடுகளை பின்பற்றும் நிலையில் இல்லை எனக் குறிப்பிட்டார்.