புது தில்லி: டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில், காரில் இழுத்துச் செல்லப்பட்டதில் மரணமடைந்த 20 வயது அஞ்சலி சிங்குடன் பயணித்த நிதி பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்கூட்டர் மீது கார் மோதி, அஞ்சலியின் கால் சக்கரத்தில் சிக்கியதை நேரில் பார்த்த நிதி, அங்கிருந்து தப்பி, தனது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கும் அவர் யாரிடமும் எதையும் சொல்லவில்லை.
இதையும் படிக்க.. கோழிக்கறியை சமைப்பதற்கு முன் அலசவே கூடாதா? ஏன்?
இவ்வளவு பெரிய சம்பவம் நடந்து ஊடகங்களில் செய்தி வெளியானபிறகும் அவர் வாய் திறக்கவில்லை. காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியபோதுதான், சம்பவத்தின் போது, ஸ்கூட்டரில் மற்றொர பெண் அமர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, நிதியை காவல்துறையினர் அடையாளம் கண்டு விசாரணைக்கு அழைத்தனர். அவர் மீது அப்போதே பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அஞ்சலி சிங்கின் தாயாரும் நிதிக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், அஞ்சலியின் தோழி நிதி, ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்ராவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிதி தற்போது பிணையில் உள்ளார் என்ற தகவலை காவல்துறை வெளியிட்டிருக்கிறது.
தெலங்கானாவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக அவர் மீது வழக்குப் பதவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் மேலும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, அஞ்சலி சிங் வழக்கில் நிதி கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், வெள்ளிக்கிழமை நிதி விசாரணைக்குத்தான் அழைக்கப்பட்டிருந்தார். அவர் கைது செய்யப்படவில்லை என்று காவலர்கள் தெரிவிக்கிறார்கள்.