
50% ஏழைகள்தான் மூன்றில் இரண்டு பங்கு ஜிஎஸ்டி செலுத்துகிறார்கள்: ஆக்ஃபாம்
புது தில்லி: ஒரு சில அல்லது மேல்தட்டு மக்கள்தான் அதிக வரி செலுத்துகிறார்கள் என்ற மாயத் தோற்றத்தை உடைக்கும் வகையில், ஆக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வில் கிடைத்திருக்கும் தகவல் அமைந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை, நாட்டில் உள்ள ஏழைகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகைதான், பெரும்பாலான மறைமுக வரியை அல்லது நுகர்வோர் தொடர்பான வரிகளை செலுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆய்வறிக்கையின்படி, மொத்த ஜிஎஸ்டி தொகையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட தொகையை அதாவது 64.3 சதவீதத்தை செலுத்துவது நமது அடித்தட்டு மக்கள்தான். இதில் மூன்றில் ஒரு பங்கு தொகையை நடுத்தர மக்களும், வெறும் 3-4 சதவீத ஜிஎஸ்டி தொகையைத்தான் நாட்டில் வாழும் கணக்காரர்கள் செலுத்துகிறார்களாம்.
இதையும் படிக்க.. பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய இளைஞர் பலி
2021 - 22ஆம் ஆண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வசூலித்த மொத்த ஜிஎஸ்டி ரூ.14.7 லட்சம் கோடி. தற்போதைய நிலவரத்தைப் பார்த்தால், 2022 - 23ஆம் நிதியாண்டில் இது ரூ.18 லட்சம் கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது.
அதாவது, கீழ்த்தட்ட மக்கள் அல்லது மிகக் குறைவான வருவாய் ஈட்டும் மக்கள்தான், மறைமுக வரிகளை அதிகம் செலுத்துவதும், நடுத்தர மக்கள் கூட 40 சதவீத மறைமுக வரியைத்தான் செலுத்துகிறார்கள் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது, அனைத்து இந்திய அளவில் பார்த்தால், உயர்தட்ட மக்களை விடவும் 6 மடங்கு அதிகமாக மறைமுக வரியை கீழ்த்தட்டு மக்கள் செலுத்துகிறார்கள்.
எனவே, மத்திய அரசு, மிகவும் அத்தியாவசியப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வாங்கும் பொருள்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது. அதேவேளையில், அதிகம் செலவிட வேண்டிய மற்றும் அலங்கார, ஆடம்பர பொருள்களின் வரியை உயர்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வருவாயையும் பெருக்க முடியும், ஏழைகளின் சுமை இயற்கையாகக் குறைக்கப்பட்டு, அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...