பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி!
தில்லியில் இரு நாள்கள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக ஜனவரி 10 ஆம் தேதி பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இரு நாள்கள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று தில்லி பாஜக அலுவலகத்தில் தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர்கள், அனைத்து மாநில பொதுச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நிகழாண்டு நடைபெறும் 10 மாநிலத் தோ்தல்கள், 2024 நாடாளுமன்றத் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் கட்சி சார்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணியளவில் கூட்டத்திற்கு வருகை தந்தார். பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையில் வாகனத்தின் நின்றபடி அவர் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி வந்தார். கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடியை பாஜக நிர்வாகிகளும் வரவேற்றனர்.