காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதோடு விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா நகரங்களான பஹல்காம் மற்றும் குல்மார்க், அனந்த்நாக், குல்காம் சோபியான், புல்வாமா, புத்காம் மற்றும் குப்வாரா, கந்தர்பால் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளிலும் பனிப்பொழிவு நிலவிவருகிறது.
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பனிப்பொழிவு மற்றும் ராம்பன், பனிஹால் இடையே கற்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும், பனிப்பொழிவு மற்றும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் குறைந்தபட்ச வெப்பநிலை உயர்ந்தது, ஆனால் பள்ளத்தாக்கு முழுவதும் உறைபனியால் மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் பூஜ்யமாக பதிவாகியுள்ளது.
தெற்கு காஷ்மீரில் உள்ள கோகர்நாக்கில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 1.4 டிகிரியாகவும், குப்வாராவில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 1.5 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மேற்குத் தொடர்ச்சி காற்றின் மாறுபாடு காரணமாக ஜனவரி 19 முதல் 25 வரை ஈரமான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை அல்லது பனிப்பொழிவுக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், ஜனவரி 23 முதல் 25 வரை மழைப்பொழிவின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
மேலும், காஷ்மீர் சமவெளிகளில் மிதமான பனிப்பொழிவும், ஜம்முவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.