
கோப்புப்படம்
புது தில்லி: இந்திய ரயில்வேயின் சரக்கு மற்றும் பயணிகள் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாய் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த நிதியாண்டில், ஜனவரி 18ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்திய ரயில்வேயின் வருவாய் ரூ.1.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் கடந்த ஆண்டு வருவாய் ரூ.1.48 லட்சம் கோடியாக இருந்தது.
சரக்குப் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாதந்தோறும் இந்திய ரயில்வேயில் 2,000 சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில் ரூ.2.3 லட்சம் கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்று மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதில் 81 சதவீத வருவாய் தற்போது ஈட்டப்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்த இலக்கை இன்னும் ஓரிரு வாரங்களில் அடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, புதிய வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
பயணிகள் ரயில்கள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.52,000 கோடியாக உள்ளது. இதுவே கடந்த 2018 - 19ஆம் நிதியாண்டில் 51,000 ஆக இருந்தது. இது போல, இந்த ஆண்டில் சரக்கு ரயில் மூலம் கிடைத்திருக்கும் வருவாய் 15.6 சதவீதம் உயர்ந்து ரூ.1.3 லட்சம் கோடியாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...