சமூக வலைதளங்களில் பொருள்களை போலியாக சித்தரித்து விளம்பரம் உள்ளிட்ட காட்சிகளைக் காண்பித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதற்காக புதிய விதிமுறைகளையும் நுகா்வோா் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் ஒரு பொருளைக் காண்பித்து அதேபோன்று தோற்றமுள்ள குறைந்த தரத்திலான மற்றொரு பொருளை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு இந்த புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.
இந்த விதிமுறைகளை வெளியிட்டு பேசிய நுகா்வோா் விவகார செயலா் ரோஹித் குமாா் சிங், சமூக வலைதள விளம்பர சந்தை 2022-ஆம் ஆண்டில் ரூ.1,275 கோடியாக இருந்தது. 2025-இல் இது ரூ.2,800 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் காண்பிக்கப்படும் பொருள்களின் விளம்பரம் எந்த நிறுவனத்தைச் சோ்ந்தது, விளம்பரப்படுத்துபவரின் விவரம் ஆகியவை அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஒரு பொருளைக் காண்பித்து அதைப்போல் தோற்றமுள்ள தரம் குறைந்த வேறு பொருளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறும் போலி பொருள் தயாரிப்பாளா்கள் மீது ரூ.10 லட்சம் தொடா்ந்து மீறும் நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும். அந்தப் பொருளின் விளம்பரத்துக்கு 3 ஆண்டுகள் வரையில் தடை விதிக்கப்படலாம் என்றாா்.