கேரள மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆரிப் முகமதுகான் முழுமையாக வாசித்தார்.
கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்துவரும் நிலையில், அரசு அளித்த உரையை முழுமையாக வாசித்து உரையாற்றினார்.
தமிழக சட்டப்பேரவையில், அரசு அளித்த உரையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசித்ததில், சில வரிகளையும், வார்த்தைகளையும் தவிர்த்து படித்தது விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில், கேரளத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதில் கேரள அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் ஆரிப் முகமதுகான் முழுமையாக வாசித்தார்.
மாநில அரசின் கடன் வரம்பை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆளுநர் உரையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனையும் ஆளுநர் வாசித்தார். வலுவான நாட்டிற்கு மாநிலங்கள் அதிகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும் எனவும் உரையில் குறிப்பிடப்பட்டது.