தடையை மீறி பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை திரையிடுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
"இந்தியா: மோடி மீதான கேள்வி" என்ற பிபிசி ஆவணப்படம் அரசியல் அரங்கில் முக்கிய கவனம் பெற்றுள்ளது. குஜராத் கலவரம், சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தின் யூடியூப் விடியோ மற்றும் அதன் இணைப்புகளைக் கொண்ட டிவிட்டர் பகுதிகளை மத்திய அரசு முடக்கி உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிக்க | எகிப்து உடனான வர்த்தகத்தை அதிகரிக்க முடிவு: பிரதமர் மோடி
ஏற்கெனவே இந்த ஆவணப்படம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டது. தில்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் திரையிட முயன்றபோது, அவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் இதுதொடர்பாக ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய மாணவர் சங்கம் பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகத்தில் சுவரொட்டியில் விளம்பரப்படுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதியின்றி மாணவர்கள் கூடவும், திரையிடலை நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியை குலைக்கும் வகையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது.