ராம்பன்: மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக இன்று மாலை நடைபெறவிருந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ யாத்ரா) இறுதியாக ஜம்மு-காஷ்மீரில் தற்போது நடைபெற்று வருகின்றது.
ராம்பன் - பனிஹால் இடையேயான 270 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஜம்மு - ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த நடைப்பயணம் நடைபெறவிருக்கிறது. எந்த தட்பவெப்பநிலையிலும், நாட்டின் பிற பகுதிகளோடு ஜம்மு - காஷ்மீரை இணைக்கும் ஒரு சாலையாக இது அமைந்துள்ளது.
இன்று காலை கனமழை பெய்த நிலையில், சாலைகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும், கொட்டும் மழையில் ராம்பன் பகுதியிலிருந்து பனிஹால் நகரம் நோக்கி ராகுல் காந்தியின் நடைப்பயணம் தொடர்ந்தது.
இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக இன்று மாலை நடைபெறவிருந்த ராகுல் காந்தியின் நடைப்பயணம் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளை ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கும் மீண்டும் நடைப்பயணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.