சுதந்திரமான ஊடக செயல்பாட்டை ஆதரிக்கிறோம் என குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
2002 குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை சர்வதேச ஊடகமான பிபிசி வெளியிட்டுள்ளது. இதுவரை 2 பாகங்களை வெளியாகியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கும் அனுமதி மறுத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை பலத்த அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | மும்பை விமான நிலையத்தில் மின்சார வாகனங்கள் அறிமுகம்
மத்திய அரசின் நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், “நீங்கள் தெரிவிக்கும் பிபிசி ஆவணப்படம் குறித்து போதிய தகவல்கள் எங்களிடம் இல்லை. அதேசமயம் இருதரப்பு உறவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக முக்கியத்துவங்கள் குறித்து அறிந்திருக்கிறோம். இருதரப்பு உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்ற விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | குடியரசு தினத்தில் மத்திய,மாநில அரசுகள் இதனை செய்ய வேண்டும்: மாயாவதி
மேலும் அவர், “உலகம் முழுவதும் சுதந்திரமான ஊடக செயல்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். ஜனநாயகப் பண்புகளான தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் உரிமை, மத சுதந்திரம் ஆகியவை ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன. இதே கருத்தைத்தான் இந்தியாவிற்கும் நாங்கள் கொண்டிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.