ஜம்மு-காஷ்மீரின், ரியாசி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் புதிய பாதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கத்ரா நகரில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு அபாயத்தைக் கருத்தில் கொண்டு வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக ஹெலிகாப்டர் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பயணிகள் பழைய பாதையான திரிகுடா மலையில் சென்று கோயிலை அடைய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக கோயிலுக்குச் செல்லும் புதிய பாதை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
வைஷ்ணவி தேவி சன்னதிக்கு வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை முகாம் கத்ராவில் கடந்த 24 மணி நேரத்தில் 315.4 மிமீ மழை பெய்துள்ளது என்று அக்கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி அன்ஷுல் கார்க் தெரிவித்தார்.
முன்னதாக, ஜூலை 31, 2019ல் கத்ராவில் சுமார் 292.4 மிமீ மழை பெய்ததாக வானிலை ஆய்வுமைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.