ஹிமாசலப் பிரதேசத்தின் கனமழை, நிலச்சரிவு காரணமாக கின்னார் மாவட்ட பள்ளிகளுக்கு ஜூலை 22 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கின்னார் துணை ஆணையர் கூறுகையில்,
மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டுத் தீர்த்துவருகிறது. இந்நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி ஜூலை 20 முதல் ஜூலை 22 வரை மாவட்டத்தில் சாங்லா மற்றும் நெச்சர் துணைப்பிரிவில் உள்ள அரசு, தனியார், அங்கன்வாடி பள்ளிகள் அனைத்தும் மூடப்படும்.
அந்தந்த மாவட்ட துணைப்பிரிவு நீதிபதிகள், மழை நிலைமையை மதிப்பாய்வு செய்வர், அதற்கேற்ப உத்தரவை திருத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தொடர்ந்து பல பகுதிகளில் அதிக மழை பெய்துவருதால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றது.
கனமழையில் சிக்கி இதுவரை 130 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர். 153 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை 572 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. இதுதவிர ஓரளவு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 4703 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 148 கடைகள் சேதமடைந்துள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.