இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.
இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி அழைப்பில் பேரில் இரு நாள்கள் பயணமாக இன்று இந்தியா வரவுள்ளார்.
இந்த நிலையில், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என்று மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், கச்சத்தீவை மீட்பது, இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அதிபரிடம் எடுத்து சென்று, சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை நாட்டுடைமையாக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல், இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்டுவதற்கு இலங்கை அதிபரை, பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.