இந்தியாவை புதிய சாத்தியக்கூறுகளின் வாய்ப்புகளாக உலகம் பார்க்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடந்த அகில பாரதிய ஷிக்ஷா சமாஜம் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது..,
உலகளாவிய பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவை புதிய சாத்தியக்கூறுகளின் வாய்ப்புகளாக உலகம் பார்க்கிறது.
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் ஆராய்ச்சி சூழலைப் பலப்படுத்துவதற்கு, கல்வியாளர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர்.
பல நாடுகள் ஐஐடி வளாகங்களைத் திறக்க இந்தியாவை அணுகுகின்றன. நாட்டின் தலைவிதியை மாற்றும் ஆற்றல் கல்விக்கு உள்ளது. இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வதில் கல்விக்கு முக்கிய பங்கு உண்டு.
பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் மற்றும் தூய்மையான எரிசக்தி போன்ற பாடங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு பள்ளிகள் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கல்வி மற்றும் திறன் பாடத்திட்டப் புத்தகங்களையும் பிரதமர் வெளியிட்டார்.
தில்லியில் உள்ள பழைய பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் இரண்டு நாள் அகில பாரதிய சிக்ஷா சமாஜம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.