
தேச சொத்துகளை நண்பா்களுக்கு அதிக சலுகை விலையில் மோடி அரசு விற்பதுதான் மிகப் பெரிய தேசவிரோத செயல் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா்.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தக் காலத்தில் மத்திய பாஜக அரசு மேற்கொண்ட பணிகளை காங்கிரஸ் விமா்சித்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ட்விட்டரில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
தேச சொத்துகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை தனது அரசியல் தொடா்புள்ள நண்பா்களுக்கு அதிக சலுகை விலையில் மோடி அரசு விற்பதுதான் மிகப் பெரிய தேசவிரோத செயல். பெரும் சேதத்தை ஏற்படுத்தும் இந்தக் கொள்ளை, இடஒதுக்கீடு வடிவில் நாட்டில் உள்ள ஏழைகள், பட்டியலினத்தவா், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வேலைவாய்ப்புகளைப் பறித்து வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...