
ஏர் இந்தியா விமானம்
வாஷிங்டன்: தில்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லியில் இருந்து 216 பயணிகள், 16 விமான பணியாளர்களுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செவ்வாய்க்கிழமை ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் வானில் பறந்துகொண்டிருந்துபோது என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த விமானி, விமானத்தை ரஷியாவில் உள்ள மகதான் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக டாடா குழுமத்துக்குச் சொந்தமான தனியார் கேரியர் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கிடைத்ததையடுத்து, 216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்களுடன் விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா நோக்கி வந்த விமான ரஷியாவின் மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்கா வந்த விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிவோம். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். அந்த விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியவில்லை.
பயணிகள் தங்கள் பாதையில் செல்வதற்கு வேண்டிய ஒரு மாற்று விமானத்தை அனுப்ப உள்ளனர். இது குறித்த மேலும் எதுவும் பேச நான் விரும்பவில்லை என்று கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...