ஒடிசா ரயில் விபத்தில் இழப்பீட்டுத் தொகைக்காக கணவர் இறந்ததாக நாடகமாடிய மனைவியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்திலுள்ள மனியபந்தா பகுதியில் வசித்து வருபவர் கீதாஞ்சலி தத்தா. இவர் தனது கணவர் பிஜாய் தத்தா, ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற பாலசோர் ரயில் விபத்தில் இறந்ததாகக் கூறி விபத்து நடைபெற்ற இடத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த உடல்களில் ஒன்றை தனது கணவரின் உடல் எனவும் அடையாளம் காட்டியுள்ளார். எனினும், அங்கிருந்த சுகாதாரத் துறை அதிகாரிகல் ஆவணங்களை சரிபார்க்கும்போது, அப்பெண் நாடகமாடியது தெரியவந்துள்ளது. அப்பெண்ண அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
எனினும், அதன் பிறகே அப்பெண்ணுக்கு பிரச்னை தொடங்கியது. இறந்ததாக அப்பெண் கூறிய கணவர் பிஜாய் தத்தா, மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாடகமாடி பொது நிவாரணத்தை பெற முயற்சித்ததற்காகவும், உயிருடன் இருக்கும்போதே தான் இறந்துவிட்டதாக அரசு அலுவலகங்களில் கூறியதற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி மீது அவர் புகாரளித்துள்ளார்.
கணவர் பிஜாய் தத்தாவும், மனைவி கீதாஞ்சலி தத்தாவும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக புகார் பெற்ற மனியபந்தா பகுதி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கணவர் புகாரளித்துள்ளதை அறிந்த மனைவி, தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகேவுள்ள பாஹாநகர் பகுதியில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரயில்வே துறை ரூ. 10 லட்சம் இழப்பீடாக அறிவித்துள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக் சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.