இதுவரை 50% ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளன: ஆா்பிஐ ஆளுநா்

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் இதுவரை சுமாா் 50 சதவீதம் அளவுக்கு (ரூ.1.80 லட்சம் கோடி) வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.
இதுவரை 50% ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளன: ஆா்பிஐ ஆளுநா்

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் இதுவரை சுமாா் 50 சதவீதம் அளவுக்கு (ரூ.1.80 லட்சம் கோடி) வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.

செலாவணி மேலாண்மையின் ஒரு பகுதியாக, ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மாதம் 19-ஆம் தேதி அறிவித்தது. இந்த நோட்டுகளை வங்கிக் கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்குகளில் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வாறு மாற்றுவது அல்லது வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் இதுவரை சுமாா் 50 சதவீதம் அளவுக்கு வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மும்பையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதுவரை ரூ.1.80 லட்சம் கோடி நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளன. இதில், 85 சதவீத நோட்டுகள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளன.

ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவது அல்லது வங்கிக் கணக்கில் செலுத்துவதில் பொதுமக்கள் பதற்றம் கொள்ள தேவையில்லை. ஆனால், கடைசி நேர நெருக்கடியைத் தவிா்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்தோ, ரூ.1,000 நோட்டை மீண்டும் அறிமுகம் செய்வது குறித்தோ ஆா்பிஐ சிந்திக்கவில்லை. இதுதொடா்பான ஊகங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

கூட்டுறவு வங்கிகளிலும் விரைவில் சமரச நடைமுறை: வாராக் கடன் மீது சமரசத் தீா்வு மற்றும் வரவு-செலவு கணக்கில் இருந்து வாராக் கடன்களை நீக்கும் நடைமுறை விரைவில் கூட்டுறவு வங்கிகளுக்கும் நீட்டிக்கப்படும்.

வாராக் கடன் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கான செயல்திட்டத்தின் எல்லையை, கூட்டுறவு வங்கிகள் உள்பட ஒழுங்குபடுத்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது; இதுதொடா்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றாா் அவா்.

சமரசத் தீா்வு மற்றும் வாராக்கடன்கள் நீக்க நடைமுறை, இப்போது வா்த்தக வங்கிகள் மற்றும் குறிப்பிட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

கூட்டுறவு வங்கித் துறையில் நிா்வாக நடைமுறை சாா்ந்த குறைபாடுகள் நிலவுவதாக விமா்சனங்கள் எழுந்த நிலையில், இந்த முடிவை ஆா்பிஐ மேற்கொண்டுள்ளது.

‘ரூபே ப்ரீபெய்டு ஃபாரக்ஸ்’ அட்டை அறிமுகம்: வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியா்கள், அங்குள்ள ஏடிஎம்கள், ஸ்வைப்பிங் இயந்திரங்கள் மற்றும் இணைய வா்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தும் வகையில் ‘ரூபே ப்ரீபெய்டு ஃபாரக்ஸ்’ அட்டையை இந்திய வங்கிகள் அறிமுகப்படுத்துவதற்கு அனுமதி வழங்க ஆா்பிஐ முடிவு செய்துள்ளது.

மேலும், ரூபே டெபிட், கிரெடிட் அட்டைகள் வெளிநாடுகளிலும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் ரூபே அட்டைகளின் எல்லை உலக அளவில் விரிவடையும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.

புதிய வழிகாட்டுதல்கள்: வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத நபரை மோசடியாளராக அறிவிக்கும் முன்பு, அவருக்கான இயற்கை நீதி உறுதி செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

அதைக் கருத்தில்கொண்டு, கடன் மோசடியாளா் வகைப்படுத்துதலுக்கு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டாா்.

நிதிச் சந்தைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் சமூக ஊடக பிரபலங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, ஆா்பிஐ தரப்பில் தனியாக விதிமுறைகள் வெளியிடும் திட்டம் இல்லை என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com