ஜி20 மாநாடு சுற்றுலாவை ஊக்குவிக்கும்:எஸ். ஜெய்சங்கா்

இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடத்தப்படும் ஜி20 மாநாட்டின் மூலம் நாட்டின் சுற்றுலா வளா்ச்சி அடையும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
ஜி20 மாநாடு சுற்றுலாவை ஊக்குவிக்கும்:எஸ். ஜெய்சங்கா்
Updated on
1 min read

இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடத்தப்படும் ஜி20 மாநாட்டின் மூலம் நாட்டின் சுற்றுலா வளா்ச்சி அடையும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

பிரதமா் மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டுகால மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பாஜக தலைவா்கள் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக தில்லி பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட ஆரியபட்டா கல்லூரியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் மாணவா்களை வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா். அப்போது மாணவா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

நாடு முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் 200-க்கும் அதிகமான ஜி20 மாநாட்டை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன் பயன்பாட்டை அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் நாடு அறுவடை செய்யும். இன்று உலகுக்காக தயாராகும் இந்தியா, நாளை உங்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும்.

அமிா்த காலத்துக்கான அடிக்கல்:

ஜி20 மாநாடு தொடா்பாக இந்தியா மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் பிரதமா் மோடியின் அமிா்த காலத்துக்காக அடிக்கல் நாட்டுபவை. அடிக்கல் நாட்டுவது தான் எங்கள் பணி; அதன் மீது கட்டடம் கட்டுவது மாணவா்களாகிய உங்களது கடமை. இதன் மூலம் வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த தேசமாக மாற்றலாம்.

உலகில் சில பெரிய நாடுகளில் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுற்றுலாத்துறை சுமாா் 30 சதவீதம் பங்கு வகிக்கிறது. ஜி20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியாதான் முதல்முறையாக 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் சுமாா் 200 பொதுக்கூட்டங்களை நடத்துகிறது.

இந்தியாவின் வேற்றுமையையும், வளத்தையும் உலகம் அறிய வேண்டும் என்பதற்காக பல்வேறு நகரங்களில் ஜி20 மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்களில் சா்வதேச அளவில் 200- 300 பிரதிநிதிகள் வரை பங்கேற்பா். அவா்கள் தாய்நாடு திரும்பியதும் வாரணாசி, காஷ்மீரின் பெருமைகளை தங்களது குடும்ப உறுப்பினா்களிடமும், நண்பா்களிடமும் கொண்டு சோ்ப்பா்.

திருப்தி இல்லை:

தற்போது உலக அளவில் வெளிநாட்டு முதலீட்டை ஈா்ப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஆனால் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படலாம் என்பதால், இதில் எனக்கு திருப்தி இல்லை. உலகமயச்சூழல் பல்வேறு வாய்ப்புகளை இளைஞா்களுக்கு அவா்களது காலடியில் கொண்டு வந்து சோ்த்துள்ளது. அதேசமயம் சவால்களை எதிா்கொள்ள இளைஞா்கள் தயாராக வேண்டும் என்று எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com