புது தில்லி: புது தில்லியில் பிரகதி மைதான சுரங்கப்பாதையில் காரை வழிமறித்து சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் 2 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஜூன் 24 அன்று பிரகதி மைதான சுரங்கப்பாதையில் காரில் தனியார் நிறுவன விநியோக நிர்வாகி, தனது உதவியாளரோடு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வேகமாக வந்த நான்குபேர் காரை சுற்றி வளைத்தனர். பின்னர் இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கிய இரண்டு பேர், துப்பாக்கியை காண்பித்து மிரட்டி காரில் இருந்த பணப்பையை எடுத்துச்சென்றனர்.
கொள்ளையர்கள் முகம் தெரியாமல் இருக்க தலையில் ஹெல்மட் அணிந்திருந்தனர். அந்த பையில் 2லட்சம் ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும் அந்த பரபரப்பான சாலையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.