போபால்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை தாக்கிப் பேசியிருக்கும் மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான், காங்கிரஸ் தலைமையைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டில் யாரும் கேட்பதில்லை என்பதல், வெளிநாட்டுக்குச் சென்று ராகுல் காந்தி பேசுகிறார். குழந்தைத்தனமாக பேசி, நாட்டை தலைகுனியச் செய்கிறார். இதைச் செய்ய விடவில்லை, அதைச் செய்யவிடவில்லை என்று கூறி குழந்தையைப் போல அழுகிறார், நீங்கள் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லுங்கள். ஆனால் நமது நாட்டு மக்களிடம் சொல்லுங்கள் என்று சௌகான் கூறியுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நான் வெளிநாடு சென்றிருந்த போது, என்னிடம் ஒருவர் கேட்டார், அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் எதையும் சாதிக்காதவர் என்று. ஆனால் அதற்கு நான் என்ன பதில் சொன்னேன் தெரியுமா? ஒரு இந்திய பிரதமராக இருப்பவர் எதையும் சாதிக்காதவராக இல்லை என்று பதிலளித்தேன். ஏன் என்றால், அவர் இந்தியாவின் பிரதமர், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் அல்ல என்பதால் என்று சௌகான் பேசியுள்ளார்.
தோல்வி, நம்பிக்கையின்மையின் காரணமாகவே அவர் இவ்வாறு அழுதுள்ளார், காங்கிரஸ் தலைமையைப் பார்க்கும்போது எனக்கு பரிதாபமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.