வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லது மூன்றாவது கூட்டணி உருவாகினாலும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவா் தெரிவித்தாா்.
பிரதமா் மோடியை பிஜு ஜனதா தளத்தின் தலைவரும், ஒடிஸா முதல்வருமான நவீன் பட்நாயக் வியாழக்கிழமை சந்தித்தாா். வரும் மக்களவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக நவீன் பட்நாயக் பின்னா் அறிவித்தாா்.
இதுகுறித்து பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவா் கூறுகையில், ‘ஒடிஸா மாநில நலனுக்காக மட்டும் பிஜு ஜனதா தளம் முன்னுரிமை அளித்து வருகிறது. நவீன் பட்நாயக்கை அண்மையில் அவரது நண்பரும் பிகாா் முதல்வருமான நிதீஷ் குமாா் சந்தித்துப் பேசினாா். மூன்றாவது கூட்டணியை அவா் உருவாக்க முயன்றாலும் அதிலும் பிஜு ஜனதா தளம் பங்கேற்காது. மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, நிதீஷ் குமாா் ஆகியோரை நவீன் பட்நாயக் சந்திப்பதில் எந்தவித தவறும் இல்லை. 2024-இல் தனித்துப் போட்டி என்பதுதான் பிஜு ஜனதா தளத்தின் முடிவு’ என்றாா்.
2024 மக்களவைக்கும் தோ்தலின்போது ஒடிஸாவில் சட்டப்பேரவை தோ்தலும் நடைபெறுகிறது. 2009-இல் பாஜகவுடனான கூட்டணியை முறித்ததில் இருந்து பிஜு ஜனதா தளம் தனித்து போட்டியிட்டு வருகிறது. எனினும், நாடாளுமன்றத்தில் விவகாரங்களுக்கு ஏற்ப பாஜகவுக்கு அவ்வப்போது பிஜு ஜனதா தளம் ஆதரவு அளித்து வருகிறது.