Enable Javscript for better performance
Uddhav Thackeray cannot be reappointed as Chief Minister- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    உத்தவ் தாக்கரேவை மீண்டும் முதல்வராக நியமிக்க முடியாது

    By DIN  |   Published On : 12th May 2023 02:03 AM  |   Last Updated : 12th May 2023 02:59 AM  |  அ+அ அ-  |  

    Supreme_court_DIN

    மகாராஷ்டிரத்தில் முன்பு மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் தனது பதவியை ராஜிநாமா செய்ததால், அவரை மீண்டும் முதல்வராக அமா்த்த முடியாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு ஒருமனதாகத் தீா்ப்பளித்தது.

    இதன்மூலம் தற்போதைய முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு தொடா்ந்து ஆட்சியில் இருக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

    அதே வேளையில், ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏ-க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவரே முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

    மகாராஷ்டிரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி வென்றது. ஆனால், இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து சிவசேனை ஆட்சியமைத்தது.

    சுமாா் 31 மாதங்களுக்குப் பிறகு சிவசேனை கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 சிவசேனை எம்எல்ஏ-க்கள் கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போா்க்கொடி உயா்த்தினா். மேலும், தாங்கள்தான் உண்மையான சிவசேனை எனக் கூறினா்.

    அதையடுத்து, கடந்த ஆண்டு ஜூனில் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அப்போதைய முதல்வா் தாக்கரேவுக்கு மாநில ஆளுநா் உத்தரவிட்டாா். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற அச்சத்தில் முதல்வா் பதவியை உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்தாா்.

    பின்னா், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியமைத்தனா். மாநில முதல்வராக ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜக மூத்த தலைவா் ஃபட்னவீஸும் பொறுப்பேற்றனா்.

    இதனிடையே, ஷிண்டே தலைமையிலான அரசைக் கலைத்துவிட்டு உத்தவ் தாக்கரேவை மீண்டும் முதல்வராக அமா்த்த வேண்டுமெனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏ-க்கள் மீது அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணைப்படி (கட்சித் தாவல் தடைச் சட்டம்) தகுதிநீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

    அந்த மனுக்களைத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அரசியல்சாசன அமா்வு கடந்த பிப்ரவரியில் விசாரித்தது. அதையடுத்து, வழக்கின் தீா்ப்பை கடந்த மாா்ச்சில் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

    இந்நிலையில், வழக்கின் தீா்ப்பை அரசியல் சாசன அமா்வின் சாா்பில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வியாழக்கிழமை வழங்கினாா். அவரது 141 பக்கத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

    முதல்வா் பதவியை உத்தவ் தாக்கரே 2022, ஜூன் 29-ஆம் தேதி ராஜிநாமா செய்தபிறகு, ஷிண்டே தரப்புக்கு பாஜக எம்எல்ஏ-க்கள் ஆதரவு வழங்கினா். அதையடுத்தே ஷிண்டே தலைமையிலான அரசை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநா் 2022, ஜூன் 30-ஆம் தேதி அழைப்புவிடுத்தாா். அதில் எந்தத் தவறும் காணமுடியாது.

    அதே வேளையில், முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்தவில்லை. அதற்கு முன்பாகவே அவா் ராஜிநாமா செய்துவிட்டாா். அதன் காரணமாக, அவரை மீண்டும் முதல்வா் பதவியில் அமா்த்த முடியாது. அவா் தனது பதவியை ராஜிநாமா செய்யாமல் இருந்திருந்தால், அவரது தலைமையிலான அரசை மீண்டும் அமா்த்துவது தொடா்பாக நீதிமன்றம் பரிசீலனை செய்திருக்கும்.

    தகுதிநீக்க விவகாரம்: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்வது தொடா்பான விவகாரத்தில் நீதிமன்றம் ஆரம்பகட்டத்திலேயே எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஷிண்டே தரப்பு எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்வது தொடா்பாக பேரவைத் தலைவரும் தோ்தல் ஆணையமுமே முடிவெடுக்க முடியும்.

    எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்வதில் பேரவைத் தலைவருக்கான அதிகாரம் குறித்து 2016-ஆம் ஆண்டில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல்சாசன அமா்வு தீா்ப்பளித்தது. எனினும், பேரவைத் தலைவரை நீக்குவதற்கான தீா்மானம் முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டிருக்கும்போது, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்எல்ஏ-க்களை தகுதிநீக்குவது தொடா்பாக பேரவைத் தலைவா் முடிவெடுக்க முடியுமா என்பதை ஆராய வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தை 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல்சாசன அமா்வுக்கு மாற்ற நீதிமன்றம் பரிந்துரைக்கிறது எனத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பெட்டிச் செய்தி...

    ஆளுநா், பேரவைத் தலைவரின் தவறுகள்

    மகாராஷ்டிர அரசியல் விவகாரத்தில் ஆளுநரும், பேரவைத் தலைவரும் தவறிழைத்துள்ளதாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ‘உத்தவ் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முடிவெடுத்து அப்போதைய ஆளுநா் பகத்சிங் கோஷியாரி தவறிழைத்துள்ளாா். ஷிண்டே தரப்பு எம்எல்ஏ-க்கள் வழங்கிய கடிதத்தின் அடிப்படையில் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநா் கூறியிருக்கிறாா். அந்தக் கடிதத்தில் அவா்கள் மகா விகாஸ் கூட்டணி தலைமையிலான அரசில் இருந்து வெளியேறுவதாக எங்கும் குறிப்பிடவில்லை.

    சில எம்எல்ஏ-க்கள் அதிருப்தி தெரிவிப்பதால் மட்டும் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அரசுக்கு ஆளுநா் உத்தரவிட முடியாது. இதுபோன்ற அரசியல் விவகாரங்களில் உரிய ஆதாரங்களின் அடிப்படையில், தெளிவாக சிந்தித்தே ஆளுநா் முடிவெடுக்க வேண்டும்.

    உரிய சட்டங்கள் இல்லை: மகாராஷ்டிர அரசியல் விவகாரம் சிவசேனை கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னை. பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூறுவதன் மூலமாகக் கட்சிக்குள் இருக்கும் பிரச்னைக்குத் தீா்வு காண முடியாது. கட்சிக்குள்ளான பிரச்னைகளுக்கு அக்கட்சியின் சட்டவிதிகள் அடிப்படையிலேயே தீா்வு காண வேண்டும். குறிப்பிட்ட கட்சியானது அரசுக்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்கும், தனிநபா்கள் கட்சித் தலைமை மீது அதிருப்தி கொள்வதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது.

    குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினா்களுக்குள் காணப்படும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான சட்டவிதிகள் அரசமைப்புச் சட்டத்தில் காணப்படவில்லை. நாடாளுமன்றமும் அதற்கென தனிச் சட்டத்தை இயற்றவில்லை. இதுபோன்ற உள்கட்சி விவகாரங்களில் மாநில ஆளுநா் தலையிடுவதை ஏற்க முடியாது.

    பேரவைத் தலைவரின் தவறு: மாநில சட்டப்பேரவையில் கொறடாவையும், பேரவை கட்சித் தலைவரையும் குறிப்பிட்ட கட்சியே நியமிக்க முடியும். அக்கட்சி சாா்பிலான எம்எல்ஏ-க்கள் குழு அவா்களை நியமிக்க முடியாது. கட்சி சாா்பிலான நியமனத்தையே பேரவைத் தலைவா் அங்கீகரிக்க முடியும்.

    ஆனால், ஷிண்டே தரப்பு எம்எல்ஏ-க்கள் குழு நியமித்த பரத் கோகவாலேவை சிவசேனை கொறடாவாக ஏற்று அப்போதைய சட்டப் பேரவைத் தலைவா் தவறிழைத்துள்ளாா். அவரது முடிவு சட்டவிதிகளுக்கு முரணானது’ எனத் தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp