தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கூடாது என்று கூறி மேற்கு வங்கத்தில் படத்திற்கான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள "தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் மே 5-ஆம் தேதி வெளியானது.
மதமாற்றம் மற்றும் பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. தமிழ்நாட்டில் இத்திரைப்படத்திற்கு தடை இல்லாதபோதிலும், பாதுகாப்பு காரணங்களால் "தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை திரையிடாமல் திரையரங்க உரிமையாளர்கள் திரும்பப் பெற்றதாகக் கூறப்பட்டது.
இதையும் படிக்க | மே 21ல் தமிழ்நாட்டிற்கு வருகிறார் ராகுல் காந்தி!
இந்த நிலையில், இத்திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு மேற்குவங்க அரசின் தடைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கான தடை நீக்கக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இந்த படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ படத்திற்கு தடை விதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, இத்திரைப்படத்தை திரையிடுவதற்கு தமிழகத்தில் மறைமுகத் தடை உத்தரவு ஏதும் மாநில அரசால் பிறப்பிக்கப்படவில்லை என்றும் போதிய வரவேற்பு இல்லாததால்தான் திரையரங்குகளில் அப்படம் திரையிடப்படவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு