தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் தொடர்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை வரும் ஜூன் 1-ஆம் தேதி வரை நீட்டித்து ரெளஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அவரது நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், ரெளஸ் அவென்யூ நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
அவர் சிறையில் படிப்பதற்கு ஏதுவாக மேஜை, இருக்கை, புத்தகங்கள் வழங்கவும், வழக்குரைஞரை அவர் சந்திக்க அனுமதிக்கவும் சிறை நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.