மே29-இல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட்!

போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட், வரும் 29-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது.
மே29-இல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட்!
Updated on
1 min read

போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட், வரும் 29-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து அன்றைய தினம் காலை 10.42 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்படவுள்ளது.

தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ என்ற கட்டமைப்பை (ஐஆா்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.

அதன்படி, ரூ.1,420 கோடி செலவில் ஐஆா்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எப், 1ஜி என 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரையான காலகட்டங்களில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இதனிடையே, முதல் முதலில் செலுத்தப்பட்ட ஐஆா்என்எஸ்எஸ் 1-ஏ செயற்கைக்கோள் செயலிழந்தது. அதற்கு மாற்றாக 2017-இல் ஐஆா்என்எஸ்எஸ் 1-ஹெச் செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஆனால், அதை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியாததால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.

அதன்பின், ஐஆா்என்எஸ்எஸ் 1ஏ-வுக்கு மாற்றாக 1-ஐ செயற்கைக்கோள் 2018-ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அதன் தொடா்ச்சியாக ஐஆா்என்எஸ்எஸ் 1-ஜி செயற்கைக்கோளுக்கு மாற்றாக என்விஎஸ்-01 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் மூலம் வரும் 29-ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனா்.

என்விஎஸ் செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுள்காலம் 10 ஆண்டுகள். இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சோ்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடா் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3: இதனிடையே, நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திரயான் -3 விண்கலத்தை ஜூலை மாதத்தில் விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் விரைவில் நிறைவடைந்து, ராக்கெட் ஏவுதலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com