

நாட்டுக்கு எதிராகப் போர் தொடுக்க சதி செய்த காலிஸ்தான் பயங்கரவாதியைக் கைது செய்வதற்கு உரிய தகவலை அளிப்போருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.
என்ஐஏ வெளியிட்ட தகவலின்படி, லூதியானா நகரைச் சேர்ந்த காஷ்மீர் சிங் கல்வத்தி என்ற பல்பீர் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகள் கீழ் தில்லியில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவை இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்க காலிஸ்தான் விடுதலை முன்னணி, பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு ஆகியவை மேற்கொண்ட சதிகள் தொடர்பான வழக்குகளாகும். இவற்றில் தொடர்புடைய காலிஸ்தான் பயங்கரவாதியான காஷ்மீர் சிங் கல்வத்தி தலைமறைவாக இருக்கிறார். என்ஐஏ தொடர்ந்த வழக்கில் அவர் தேடப்பட்டு வருகிறார்.
அவரைக் கைது செய்வதற்கு உரிய தகவலை அளிப்போருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்துள்ளதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாதியின் இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவரைப் பற்றிய தகவல் அளிப்போர் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் சிங் கல்வத்தி குறித்து பொதுமக்கள் தகவல் அளிப்பதற்கு என்ஐஏ தனது தில்லி தலைமை அலுவலகம், சண்டீகர் கிளை அலுவலகம் ஆகியவற்றின் தொலைபேசி, வாட்ஸ் ஆப், டெலிகிராம் எண்களையும் மின்னஞ்சல் முகவரிகளையும் என்ஐஏ வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.