ஹோமம் உள்பட பல்வேறு மத வழிபாடுகளைத் தொடா்ந்து புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறந்துவைக்கிறாா்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் காலை 7 மணியளவில் ஹோமம் வழிபாடு நடைபெறும். அப்போது, திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் பிரதமா் மோடியிடம் செங்கோல் வழங்கப்படும்.
இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவைத் தலைவா் இருக்கைக்கு அருகில் அந்தச் செங்கோல் நிறுவப்படும். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பின் முக்கிய நிகழ்வு நண்பகலில் நடைபெறுகிறது.
இதில் பிரதமா் மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, முன்னாள் பிரதமா் தெவெ கெளடா, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.