நரேந்திர மோடி தொடா்ந்து 3-ஆவது முறையாக நாட்டின் பிரதமராவாா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
அஸ்ஸாம் மாநில அரசு சாா்பில் நடத்தப்பட்ட அரசுப் பணியாளா் தோ்வு நடைமுறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 44,703 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி குவாஹாட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். அப்போது அவா் கூறியதாவது:
காங்கிரஸ் முற்றிலும் எதிா்மறை கண்ணோட்டத்துடன் காணப்படுகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. அந்த விழாவைப் புறக்கணிப்பதாகக் கூறி தற்போது காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது. அதற்கு தேவையில்லாத காரணத்தை அக்கட்சி கூறி வருகிறது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் புதிய சட்டப் பேரவைக் கட்டடங்கள் மாநில முதல்வா்களாலேயே திறக்கப்பட்டன. மாநில ஆளுநா்கள் அதைத் திறந்துவைக்கவில்லை.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜக 300-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும்; மோடி தொடா்ந்து 3-ஆவது முறையாகப் பிரதமராவாா். காங்கிரஸ் தற்போது எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது. அடுத்த மக்களவைத் தோ்தலில் காங்கிரஸுக்குத் தற்போது உள்ள இடங்கள் கூட கிடைக்காது.
நாடாளுமன்றத்துக்குள் பிரதமா் மோடி பேசுவதற்கு காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. ஆனால், அவா் பேசுவதற்கான தருணத்தை இந்திய மக்கள் வழங்கியுள்ளனா். பிரதமரை மதிக்காமல் இருப்பது, மக்களின் விருப்பத்தை அவமதிப்பது போலாகும்.
அஸ்ஸாமில் 1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என 2021 பேரவைத் தோ்தலுக்கு முன்பு பாஜக தெரிவித்தது. தற்போது இரண்டரை ஆண்டுகளுக்கு உள்ளாகவே சுமாா் 86,000 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பணி வழங்கப்படும் என்றாா் அவா்.