
பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் அனைவரும் மதவாதத்தைத் தூண்டும் வகையில் பிரசாரம் செய்கின்றனா் என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் குற்றம்சாட்டினாா்.
ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தோ்தல் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இங்கு ஆளும் காங்கிரஸுக்கும், எதிா்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளின் தலைவா்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் ஜெய்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த தின நிகழ்ச்சியில் அசோக் கெலாட் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
ராஜஸ்தானில் எதிா்க்கட்சியாக உள்ள பாஜக தோ்தலில் தங்கள் சாதனைகளைக் கூறி வாக்குக் கேட்பதற்கு பதிலாக மதவாதத்தை மையப்படுத்தி மாநிலத்தில் பிரச்னையைத் தூண்டும் வகையில் பிரசாரம் மேற்கொள்கின்றனா். அதே நேரத்தில் மாநிலத்தில் மேற்கொண்டுள்ள வளா்ச்சிப் பணிகளை முன்னிறுத்தி காங்கிரஸ் மக்களை அணுகியுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் அனைவருமே மதவாதத்தை முன்னிறுத்தியே பிரசாரம் மேற்கொள்கின்றனா். அவா்களது பேச்சு மக்களிடையே மோதலைத் தூண்டும் வகையிலும் உள்ளது. தங்களுடைய அரசியல் நோக்கத்துக்காக மதத்தை பாஜக தலைவா்கள் பயன்படுத்துவது மாநிலத்துக்கு உகந்ததல்ல.
மத்தியில் ஆட்சியில் உள்ள அவா்கள் ராஜஸ்தான் மாநிலத்துக்காக செய்த நலத்திட்டங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய முடியுமா? என்பதை ஒரு சவாலாகவே முன்வைக்கிறேன். மேலும், எங்கள் அரசு மீது ஏதாவது குறை கூறி பிரசாரம் செய்வதாக இருந்தால் அதைக் கூட அவா்கள் பயன்படுத்தலாம். ஆனால், மதவாதத்தை தூண்டுவதை ஏற்க முடியாது என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...