ராஜஸ்தானில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு, 'பாஜகவின் பிரிஜ் பூஷண் சிங்கை மறக்க முடியுமா?' என்று காங்கிரஸின் கௌரவ் வல்லப கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்தில் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியை குற்றம்சாட்டி பேசி வருகிறார்.
அப்போது பாலி பகுதியில் பேசிய பிரதமர் மோடி 'ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, முதல்வர் அசோக் கெலாட் பெண்களை அவமதிக்கிறார்' என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப, 'ராஜஸ்தானில் பிரதமர் மோடி கூறிய அனைத்து குற்றங்களும் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல நாங்கள் வழக்குப்பதிவு செய்யாமல் இல்லை. ஆனால் ஒரு சில மாநிலங்களில் பெரிய குற்றங்களைக்கூட பதிவு செய்வதில்லை.
நாங்கள் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை எப்போதும் ஆதரிப்பதில்லை. ஆனால், பாஜக அவர்களைத்தான் ஆதரிக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு ஆதரவாக பாஜக இருப்பதில்லை. பிரிஜ் பூஷண் சிங்கை மறக்க முடியுமா? பிரதமர் மோடி, மல்யுத்த வீராங்கனைகளின் பக்கம் நிற்காமல் வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பிரிஜ் பூஷணுக்கு ஆதரவாக போராட்டம் செய்கிறார்.
இந்தியாவில் மகள்களை பாதுகாப்பதாகக் கூறும் பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு ஆதரவாக இல்லை. அது ஏன்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்தத்துடன் மிகப்பெரிய போராட்டத்தையும் முன்னெடுத்தனர். இது தொடர்பான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ம.பி.யில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு!