பயிர்க்கழிவுகள் எரிப்பு தொடர்பாக அரசியல் செய்வதை ஹரியாணா முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: பஞ்சாப் அமைச்சர்
பயிர்க்கழிவுகள் எரிப்பு விவகாரத்தில் ஹரியானா முதல்வரைத் தாக்கிப் பேசிய பஞ்சாப் அமைச்சர் ஹர்பால் சிங் சீமா, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு விவசாயிகளுடன் நிற்க வேண்டும்" என்று கூறினார்.
முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான பஞ்சாப் அரசு பயிர்க்கழிவுகள் எரிப்பு விவகாரம் குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை, உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளபடி பஞ்சாப் மாநில அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியிருந்தநிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக பஞ்சாப் அமைச்சர் பேசினார்.
செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய பஞ்சாப் அமைச்சர் சீமா, "அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் பஞ்சாபில் பயிர்க்கழிவுகள் எரிக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாறாக, ஹரியாணாவில்தான் இந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே ஹரியாணா முதல்வர் கட்டார் இதில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு விவசாயிகளுடன் நிற்க வேண்டும்." என்று கூறினார்.
இதுகுறித்து ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது: “பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் விவசாயிகளுக்கு வழங்கிவருகிறோம். அரசின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பயிர்க்கழிவுகள் எரிப்பதை நிறுத்திய விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த விவகாரம் அரசியலுக்கானது அல்ல. தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.
மேலும் பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலைப் பலன்களை இழக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.