உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று நவ. 25 'இறைச்சி இல்லாத நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. சாது தன்வர்தாஸ் லீலாராம் வாஸ்வானியின் பிறந்த நாளையொட்டி மாநிலத்தில் அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி அரசு வெளியிட்ட அறிவிப்பில் 'காந்தி ஜெயந்தி, சிவராத்திரி போன்ற நாள்களில் மாநிலத்தில் அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், சாது டி.எல். வாஸ்வானியின் பிறந்த நாளையும் இறைச்சி அற்ற நாளாகக் கடைப்பிடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, அனைத்து இறைச்சிக் கடைகளும் கட்டாயம் மூடப்பட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி தலைமையிலான உ.பி. அரசு, ஹலால் சான்று பெற்ற உணவுப் பொருள்களின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு ஆகியவற்றைத் தடை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தார் பிரதமர் மோடி!
பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கைக் கண்டித்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பா.ஜ.க. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சமூகத்தினரிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பா.ஜ.க இதுபோன்ற சர்ச்சை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறது. சமூகத்தினருக்கிடையே வெறுப்பைப் பரப்புவதும் வேற்றுமையை ஏற்படுத்துவதுமே அதன் குறிக்கோளாகவுள்ளது. இப்போது கவனம் பெற வேண்டிய பிரச்னைகளாக, விலைவாசி உயர்வும் வேலையில்லாத் திண்டாட்டமுமே இருக்க, சம்பந்தமில்லாத விஷயங்களில் பா.ஜ.க. கவனம் செலுத்திவருகிறது. இது மக்களைப் பிரிக்கச் செய்யும் சூழ்ச்சி என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள் எனவும் அகிலேஷ் யாதவ் கூறினார். இந்த நிலையில் ஹலால் பொருள்கள் மேல் நடவடிக்கை எடுத்ததற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார் பா.ஜ.க தலைவர் கிரிராஜ் சிங்.