இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர் அக். 7 ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது.
இரு தரப்பிலும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் படை வசம் இருந்த காஸா பகுதியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 4 ஆவது நாளாக இரு தரப்புக்கும் இடையே தாக்குதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
'பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தொலைபேசி அழைப்புக்கும் இஸ்ரேலில் தற்போதைய நிலைமை குறித்து தெரிவித்ததற்கும் நன்றி. இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறார்கள். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.